முதல் நாளில் 5,286 பேருக்கு கொரோனாத் தடுப்பூசிகள்! எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

முதல் நாளில் 5,286 பேருக்கு
கொரோனாத் தடுப்பூசிகள்! எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லையாம்.

இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனேகா கொரோனாத் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் நேற்று ஆரம்பமானது.

முதலாம் நாளான நேற்று 2 ஆயிரத்து 280 சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டது எனச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

அத்துடன் நேற்று முதல் நாளில் 5 ஆயிரத்து 286 பேருக்குக் கொரோனாத் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆயிரத்து 886 பேருக்கும், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் 803 பேருக்கும், கொழும்பு தெற்கு போதனா வைத்தியாலையில் 781 பேருக்கும், நாரஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் 600 பேருக்கும், பனாகொட இராணுவ முகாமில் 400 பேருக்கும், பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 382 பேருக்கும், ஹோமாகம வைத்தியசாலையில் 190 பேருக்கும், முல்லேரியா வைத்தியசாலையில் 108 பேருக்கும், கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் 80 பேருக்கும், வெலிசறை கடற்படை முகாமில் 56 பேருக்கும் கொரோனாத் தடுப்பூசிகள் நேற்று ஏற்றப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஏற்றப்பட்ட கொரோனாத் தடுப்பூசிகளால் எவருக்கும் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு தேசிய தொற்று நோய் வைத்தியசாலை (ஐ.டி.எச்.), கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நாரஹேன்பிட்விலுள்ள இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொரோனாக் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வில் அந்த வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த அபேவிக்கிரம முதலாவதாகத் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டார். அதையடுத்து வைத்தியசாலையின் சிரேஷ்ட தாதியான சம்பிகா ஷீதானி உடுகமகோரலவிற்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொரோனாத் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி வைத்தியர் ராசியா பென்சே, கொரோனாக் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர , ஐ.டி.எச். வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹசித அத்தநாயக்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, நேற்றுக் காலை நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது இராணுவ சிப்பாய்கள் மூவருக்கு ஒரே நேரத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.