நாட்டின் சுதந்திரம் யாருக்கோ என்று எண்ணுமளவில் சிறுபான்மையினர் ரிஷாத் அறிக்கை.

நாட்டின் சுதந்திரம் யாருக்கோ என்று
எண்ணுமளவில் சிறுபான்மையினர்
ரிஷாத் எம்.பி. அறிக்கை

இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில் சிறுபான்மைச் சமூகங்கள் கொண்டாட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்க்கின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாளை வியாழக்கிழமை கொண்டாடும் இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“நமது நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரும் அரசியல், மதம், சமூக, பொருளாதார, வாழ்வியல் உரிமைகளைச் சுதந்திரமாக அனுபவிக்கவே வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து நாட்டை மீட்கப் போராடினர்.

இந்தப் போராட்டத்தில் பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் சகல சமூகங்களையும் சார்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளடங்கலாக பொதுமக்களும், நாட்டின் சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புடன் உழைத்ததுதான் வரலாறு.

இந்தத் தினம், குறித்த ஒரு சமூக, மதத்துக்கான சுதந்திரம்தானோ? என்று எண்ணுமளவுக்கு ஓரங்கட்டப்படும் நிலைதான் சிறுபான்மைச் சமூகத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது.

நாட்டுப் பற்றில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு உள்ள அளவுகடந்த ஆர்வத்தை உதாசீனம் செய்வதாகத்தான், இந்த அரசின் செயல்பாடுகள் எமக்குத் தெரிகின்றன. இது தமிழ் மொழியில் தேசிய கீதம் மறுக்கப்படுவதிலிருந்து ஊர்ஜிதமாகின்றது.

எனவே, தனித்த ஒரு சமூகத்துக்கான கொண்டாட்டங்களாக அன்றி, சகலரையும் நாட்டுப்பற்றுடன் நேசிக்கின்ற சுதந்திர தின ஏற்பாடுகளைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இருந்தும் அரசியல் நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டாலும் நாட்டுப் பற்றை கைவிடும் மனநிலையில் சிறுபான்மையினர் இல்லை என்பதை ஆணித்தரமாகக் கூற விரும்புகின்றோம்”என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.