ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்.

ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்
ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்

மியான்மர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
பதிவு: பிப்ரவரி 05, 2021 06:00 AM
ஜெனீவா,

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், மியான்மர் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

மியான்மரில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.

இதற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், மியான்மர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து பேசிய ஐ.நா. தலைவர் அண்டோனியோ குட்டாரெஸ், தற்போது மியான்மரில் நிலவி வரும் சூழ்நிலை கவலையளிப்பதாக தெரிவித்தார். ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை காக்கப்பட வேண்டும் எனவும் மியான்மர் மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.