அடங்க மறுக்கும் புதிய கொரோனா: இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், குணம் அடைந்தவர்களையும் மீண்டும் தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளனர்
 
ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸால் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்ட உலக மக்களுக்கு, கொரோனா தடுப்பூசிகளால் தற்போது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதனிடையே, ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டது.

பரவும் வேகம் அதிகம்

பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த புதிய கொரோனா வைரஸுக்கு VUI 202012/1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது புதிய வகை கொரோனா வைரஸ் அல்ல என்றும், மரபியல் மாற்றம் மட்டுமே அடைந்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் பரவும் முறையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், பரவும் வேகம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து புள்ளி விவரம்

இங்கிலாந்து புள்ளி விவரத்தின்படி பழைய வைரஸ் நோயை பரப்பும் வீதம் 1.1ஆக இருந்தது. ஆனால், உருமாறிய வைரஸ் 1.5 முதல் 1.7 சதவீதம் வரை நோயை பரப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வேரியண்ட் 30 சதவீதம் அதிக மரண அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அதிகரிக்கும் புதிய கொரோனாக்கள்

அதேபோல், தென் ஆப்பிரிக்காவிலும் மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து உள்பட சுமார் 20 நாடுகளில் தென் ஆப்பிரிக்கா வேரியண்ட் கொரோனா பரவியுள்ளது. மேலும், பிரேசில் நாட்டின் அமேசோனாஸ் மாகாணத்தில் 3ஆவது வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டதும் மரணம்.. தடுப்பூசியால் மரணம் வருமா? உண்மை என்ன?

அந்த வகையானது உள்நாட்டில் பரவலாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிரிட்டனில் ஏற்கெனவே பரவும் புதிய கொரோனா மேலும் வலுவடைந்து இன்னொரு கொரோனாவால உருவாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியால் தடுப்பது சந்தேகமே

இந்த உருமாறிய புதிய கொரோனாவை தடுப்பூசிகளால் தடுக்க முடியுமா என்பது சந்தேகமே என்கின்றனர் ஆய்வாளர்கள். உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளும் பலன் அளிக்காமல் போகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள், புதிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்த நிலையில், தற்போது புதிய கொரோனாவை தடுப்பூசிகள் தடுப்பது தொடர்பாக அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடங்க மறுக்கும் கொரோனா

கொரோனா அதிக வீரியம் மிக்கதாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசை ஆய்வு செய்ததில், உருமாறிய அந்த கொரோனா வைரஸ் ஏற்கனவே அந்நோயின் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களையும், கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களையும் எளிதாக தாக்க வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பு மருந்துகளை செலுத்தி ஆய்வு செய்த போது உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.