சசிகலா வரவேற்பின் போது பற்றி எரிந்த இரு கார்கள், கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

சசிகலா ஆதரவாளர்களின் இரு கார்கள் தீ பிடித்து எரிந்து நாசமாகியது.

பெங்களூர் தனியார் பண்ணைவீட்டில் ஓய்வில் இருந்த சசிகலா இன்று காலை அங்கிருந்து கிளம்பி சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்.

அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான அமமுக தொண்டர்கள் வழிநெடுவே நிற்கின்றனர். ஆங்காங்கே அவரது காரை நிறுத்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பட்டாசு வெடித்தல், பூ தூவுதல், ஆரத்தி எடுத்தல், பால் குடம் எடுத்தல் என வரவேற்பு ஏற்பாடுகள் பெரியளவில் நடைபெறுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி அருகே சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த கார் ஒன்றில் இருந்த பட்டாசு வெடிக்கத் தொடங்கியது. இதனால் அந்த கார் தீ பற்றி எரியத் தொடங்கியது. தீ மள மளவென பரவியதால் அருகிலிருந்த மற்றொரு காரும் தீப் பிடித்து எரியத் தொடங்கியது.

காருக்குள் பட்டாசுகள் அதிகளவில் இருந்ததால் அவ்வப்போது அவை வெடித்து தீ அருகில் பரவும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள கார்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த கார்களை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

Leave A Reply

Your email address will not be published.