கிளிநொச்சியில் மற்றொரு ஆடைத்தொழிற்சாலையில் இருவருக்குக் கொரோனா! – வடக்கில் இன்று நால்வருக்குத் தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் கிளிநொச்சியில் உள்ள மற்றொரு ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 340 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 4 பேருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கரைச்சியில் உள்ள மற்றொரு ஆடைத்தொழிற்சாலையில் கடந்த வாரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் நெஞ்சுவலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.