ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி விசாரணை அறிக்கை பொதுபலசேனாவிடமும் கையளிக்கப்பட வேண்டும்

ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி விசாரணை அறிக்கை
பொதுபலசேனாவிடமும் கையளிக்கப்பட வேண்டும்

ஜனாதிபதியின் செயலாளருக்குக் கடிதம்

“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒரு பிரதியை பொதுபலசேனா அமைப்புக்கும் வழங்க வேண்டும் அல்லது பொதுபலசேனா அமைப்பு குறித்து பிரதான நிலை ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி குறித்து உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெக்க வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தி பொதுபலசேனா அமைப்பின் ஊடகச் செயலாளர், ஜனாதிபதியின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இஸ்லாமிய அடிப்படைவாதிகளா கடந்த 2019.04.21ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுபலசேனா அமைப்பு மற்றும் அதன் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று பிரதான ஊடக சேவை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு மாத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கோ, ஏனைய தரப்பினருக்கோ இதுவரையில் வழங்கப்படவில்லை. எமது அமைப்பு குறித்து அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்படும் விடயங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளமை பொதுபலசேனா அமைப்புக்கு இழைக்கும் அநீதியாகவே கருத முடியும்.

பொதுபலசேனா அமைப்பு தொடர்பில் பிரதான ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தியை ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவே குறித்த ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த விடயம் குறித்து எமது அமைப்பின் சார்பில் சாட்சியங்களைப் பெறுவது அவசியமாகும்” – என்றுள்ளது.

2019.04.21 அன்று – உயிர்த்த ஞாயிறு தினத்தில் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினர் கடந்த மாதம் 31ஆம் திகதி விசாரணை அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.