கொரோனாவில் இருந்து மீண்டார் பழ.நெடுமாறன்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழ.நெடுமாறன் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

தமிழ்நாட்டு தமிழ்த் தேசியத் தளத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சுமார் அரை நூற்றாண்டு காலமாக செயற்பட்டு வரும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு அண்மையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

சிகிச்சையின் பின்னர் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்களது ஆலோசனை வழங்கியிருந்தமைக்கு அமைவாக ஏற்கனவே பஙகேற்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்த நிகழ்சிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுகின்றன என்று தலைமை நிலையப் பொதுச் செயலாளர் செ.ப.முத்தமிழ்மணி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சிகிச்சையின் பின்னர் முழுமையாகக் குணமடைந்த பழ.நெடுமாறன் தற்போது வீடு திரும்பி ஓய்வில் இருக்கின்றார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உறுதியுடன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வரும் பழ.நெடுமாறன் குணமடைய வேண்டும் என ஈழத்திலும் புலத்திலும் உள்ள தமிழர்கள் விசேட வழிபாடுகளை நடத்தி வேண்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.