“பக்கிங்ஹாம் நிறவாத அரண்மனை!” “தற்கொலை செய்ய எண்ணினேன்!!” : அரச மருமகள் மேகன் மெர்க்ல்

பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்குள் தனது வாழ்க்கை எப்படி இருந்தது என்று இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மெர்க்ல் (Meghan Markle) வெளியிட்டிருக்கும் பரபரப்பான தகவல்கள் பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனைக்குள் புயலைக்கிளப்பி இருக்கிறது.

தனது மகனின் தோலின் நிறம் குறித்து அரண்மனைக்குள் நிறவாதக் “கவலை” இருந்தது என்ற “ஒரு குண்டையும்” தூக்கிப்போட்டுள்ளார் மேகன். ஆயினும் பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத் தனக்கு மிகவும் விருப்பமான குணம் கொண்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களது அரச திருமண வைபவத்துக்கு மூன்று தினங்களுக்கு முன்பாகத் தாங்கள் இருவரும் ரகசியமாகத் திருமணம் புரிந்து கொண்டனர் என்ற தகவலையும் இளவரசர் ஹரியும் மேகனும் முதல் முறையாக வெளியிட் டுள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேய்க்கு (Oprah Winfrey) இளவரசர் ஹரியும், அவரது துணைவியான மேகனும் வழங்கிய இரண்டு மணிநேர நேர்காணலை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி உள்ளன. பிரிட்டிஷ் அரச குடும்ப வாழ்வு பற்றி இருவரும் அந்த நேர்காணலில் வெளியிட்ட உள்வீட்டு ரகசியங்கள் உலகெங்கும் அதிர்வலை களை ஏற்படுத்தி உள்ளன.


தான் கருவுற்றிருந்த சமயத்தில்- தனது ஆண்குழந்தை பிறப்பதற்கு முன்னரே அவனது தோலின் “நிறம்” எப்படி இருக்கும் என்று விமர்சிக்கும் உரையா டல்கள் தனக்கு முன்பாகவே நிகழ்ந்தன என்ற வில்லங்கமான செய்தியை மேகன் வெளியிட்டிருக்கிறார்.

ஆண் மகன் இளவரசர் ஆர்ச்சி(Archie) பிறப்பதற்கு முன்னரே அவனது தோல் “கறுப்பாக” இருக்கும் என்றும் அவனுக்கு பட்டமோ பாதுகாப்போ வழங்கப்பட மாட்டாது எனவும் அரச குடும்பத்தினர் கருதினர் என்று மேகன் சுமத்தியுள்ள நிறவாதக் குற்றச்சாட்டு அரண்மனை மீது விமர்சனங்களைக் கிளப்பி உள்ளது.

அமெரிக்கப் பெண்ணான மேகன் மெர்க்லின் தந்தையார் வெள்ளை இனத்தவர். தாயார் ஒரு கறுப்பினப் பெண் ஆவார். இதனை அடிப்படையாக வைத்தே அவரது குழந்தையின் நிறம் பற்றி அரச குடும்பத்தினர் சிலாகித்துள் ளனர் எனச் சொல்லப்படுகிறது.

அரண்மனையை ஓர் “இருண்ட இடமாக” உணர்ந்தபோதிலும் தன் மனைவிக்காக அங்கே தங்கி இருந்ததாக இளவரசர் ஹரியும் நேர்காணலில் கூறியிருக் கிறார். தாங்கள் நிதி ஆதாரங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டு உழைப்பை மட்டும் நம்பும் நிலைமையில் இருப்பதையும் ஹரி வெளிப்படுத்தி இருக்கிறார்.

2018 இல் இளவரசர் ஹரியை திருமணம் புரிந்த சமயத்தில் “அப்பாவியாக” இருந்தேன் என்று கூறிய மேகன், “அரச குடும்பத்து வாழ்க்கை மிகவும் தனிமை சூழ்ந்தது. ஆதரவு இல்லாதது. அங்கு தற்கொலை எண்ணங்களை அனுப வித்தேன். இனிமேலும் உயிருடன் இருக்கக் கூடாது என்று எண்ணும் சந்தர்ப்பங்களைச் சந்தித்தேன் “-என்று தெரிவித்திருக்கிறார்.

நீண்ட தொலைக்காட்சி உரையாடலில் ஹரியும் மேகனும் அரச குடும்பத்த வர்கள் எவரையும் பெயர் குறிப்பிட்டுக் கருத்து எதனையும் முன்வைக்கவில்லை.

ஆயினும் அரச கடமைகளில் இருந்து விலகிய இருவரும் தங்கள் நலனுக்காக அரச குடும்பத்தை அவமரியாதை செய்கின்ற – சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுகளை- அமெரிக்காவில் அவிழ்த்து விட்டிருக்கின்றனர் என்று லண்டன் ஊடகங்கள் சில கருத்து வெளியிட் டுள்ளன. அரச குடும்ப வாழ்வுக்குப் பரீட்சயம் இல்லாத மெகனின் ஆதங்கம், கவலைகள் என்பன சுமார் 26 ஆண்டு களுக்கு முன்னர் இளவரசி டயானா வெளியிட்ட உணர்வுகளைப் பெரிதும் ஒத்திருப்பதாக விமர்சகர்கள் குறிப்பிடு கின்றனர்.

மெகனின் செவ்வி குறித்துக் கருத்து வெளியிட்ட பிரிட்டிஷ் சிறுவர் நல அமைச்சர் விக்கி போர்ட் (Vicky Ford), “எங்கள் சமூகத்தில் எங்கும் இனவாதத் துக்கு இடமில்லை” – என்று கூறியிருக் கிறார்.

ஹரி – மெகன் தம்பதிகளது குற்றச் சாட்டுகள் குறித்த பக்கிங்ஹாம் அரண் மனையின் உத்தியோகபூர்வ பதில்களை உலகம் எதிர்பார்த்திருப்பதாக ஊடகங் கள் குறிப்பிட்டுள்ளன.

– குமாரதாஸன் (பாரிஸ்)

Leave A Reply

Your email address will not be published.