மத்தியில் அரசுடன் கூட்டணி; மாகாண சபையில் தனி வழி சு.க. அதிரடி முடிவு.

இவ்வருடத்துக்குள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் சுதந்திரக் கட்சி பங்காளியாக இருப்பதால், கூட்டணியாகத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும், தேவையான இட ஒதுக்கீடுகள் கிடைக்காத பட்சத்தில் தனி வழி செல்வதே சிறந்தது எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் தனி வழி சென்றால்கூட அரசியிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறாது எனவும், மத்தியில் கூட்டணி பயணம் தொடரும் எனவும் சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.