சிறுபான்மை இனத்தவர்களை அடக்கினால் அழிந்தே போவீர்! அரசுக்கு ரிஷாத் பகிரங்க எச்சரிக்கை.

“இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்துகொள்ளுங்கள். இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத்தான் வீழ்ச்சி ஏற்படும். அது அழிவுக்கே வழிவகுக்கும்.”

இவ்வாறு அரசுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் கடந்த 10 வருடங்களாகவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் காலப்பகுதியில் அளுத்கம, திகன, கொழும்பு கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது சஹ்ரானின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், உண்மையான முஸ்லிம்கள் சஹ்ரான் போன்றோரின் செயற்பாடுகளை அங்கீகரிக்கமாட்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோன்று அந்த விடயத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவிகளை அரசு விடுதலை செய்ய வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.