விரைவில் சஜித் ஆட்சி! – எரான் ஆரூடம்.

ஜனநாயக விரோதப் போக்கில் செயற்படும் ராஜபக்ச அரசு விரைவில் கவிழும் என்றும், சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய ஆட்சி மலரும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு பல விடயங்களை நாடாளுமன்ற விவாதம் இன்றி பின்வாசல் வழியாக பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றது.

அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள நீதிமன்றத்தின் அதிகாரத்தை இரத்துச் செய்து ஜனநாயகத்துக்கு விரோதமாகச் செயற்பட அரச தரப்பினர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெற்றதில்லை.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபாநாயகருக் அறிவிக்காமல் எந்தவொரு விடயத்தையும் நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்க முடியாது. எனினும், கொழும்புத துறைமுக நகர சட்டமூலம் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. நாடாளுன்றத்தில் பெரும்பான்மையை உபயோகித்து இதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று எதிர்பார்த்திருக்கக் கூடும்.

2015 – 2019 காலங்களில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் மீண்டுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இதன் மூலம் அரசிலுள்ள பலரும், அரசுக்கு நெருக்கமானவர்களும் பல வழக்குகளிலிருந்தும் விடுவிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு பல செயற்பாடுகளையும் மறைமுகமாகச் செய்ய முற்படுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.