முதல் நாள் அழுத்தியுரைத்த கருத்துகளை மறுநாள் அடியோடு மறுதலித்த கர்தினால்!

நேற்றுமுன்தினம் கூறிய கருத்தில் இருந்து 180 பாகைக்கு மீளத் திரும்பியவராக, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என்ற அர்த்தப்பட தாம் கூறவில்லை என கொழும்பு மறைமாவட்ட பேராயரும் இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்களின் தலைமைக்குருவுமான கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தமது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு தாக்குதல் மேற்கொண்டவர்களை பகடைக்காய்களாக பெயர் குறிப்பிடாத சில தரப்புக்கள் பயன்படுத்தியுள்ளதாகத் தம்மை மேற்கொள் காண்பித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் திரிவுபடுத்தப்பட்டதாகவும், தாம் சர்வதேச சக்திகளையும் வகாபிஸத்துடன் அவற்றுக்குள்ள தொடர்புகளையுமே குறிப்பிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“என்னுடைய கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. இந்த நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதமோ அதன் விரிவாக்கமோ இல்லை என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை. நான் எந்தவொரு அரசியல் சக்தியைப் பற்றியும் குறிப்பிடவில்லை. நான் வகாபிஸம் பற்றியும் அதனை எப்படி சில சக்திமிக்க நாடுகள் பயன்படுத்தி வருகின்றன என்பது பற்றியுமே பேசினேன்.

நான் எந்த உள்நாட்டு அரசியல் சக்திகளைப் பற்றியோ தலைவர்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை” – என்றார்.

நேற்றுமுன்தினம் பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித், ‘ஈஸ்டர் தாக்குதல்களானது மதத் தீவிரவாதம் அன்றேல் மதம் மீதுள்ள அதீத பற்றினால் நடத்தப்பட்டதொன்றாக நாம் காணவில்லை. மாறாக குறித்த அரசியல் சக்திகள் தமது அதிகாரத்தை நிலையை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியாகவே கருதுகின்றோம்’ என்று கூறியிருந்தார்.

கர்தினாலின் கருத்துக்கள் தற்போது எதிர்க்கட்சியிலுள்ள ஒருசில தரப்பினரின் உணர்வலைகளை எதிரொலிப்பதாகக் காணப்பட்டன. தற்போதைய அரசிலுள்ள தரப்பினருடன் தொடர்புடைய சக்திமிக்க அரசியல் சக்திகளே இந்தக் குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டதாக எதிர்க்கட்சியிலுள்ள சில தரப்புக்கள் அவ்வப்போது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்துள்ளன.

கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்த கடும் தொனியிலான கருத்துக்களை கத்தோலிக்க திருச்சபை மறுதலித்த இரண்டாவது சந்தர்ப்பமாக நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பு அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் தொடர்பாக அரசு மேற்கொண்டு வருகின்ற விசாரணைகளில் போதய முன்னேற்றம் காணப்படாமை அன்றேல் விசாரணை வினைத்திறன் வீரியமாக காணப்படாமை குறித்து அண்மைக்காலமாக கர்தினால் விரக்தியடைந்தவராக கடுந்தொனியில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றதைக் காணமுடிகின்றது.

இம்மாத முற்பகுதியில் கோபத்துடன் கூடிய முகபாவனையோடு காணப்பட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாகச் சாடியிருந்தார். மீண்டும் அதிகாரத்தைப் பிடிப்பதற்காக தேர்தலில் போட்டியிடப்போவதாக மைத்திரிபால சிறிசேன கூறியமை குறித்து கருத்து வெளியிட்டிருந்த கர்தினால் சிறிசேன ஆடையை அணிந்துகொண்டா இப்படிக் கருத்துவெளியிடுகின்றார் என்று வினவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இலங்கை கத்தோலிக்க ஆயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளரான அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, கர்தினாலின் கடுந்தொனியிலான கருத்துக்கள் எவர் மீதான தனிப்பட்டதோ அன்றேல் அரசியல் ரீதியானதான கருத்துக்கள் அல்ல என்று தெரிவித்தார். “எவரையும் அரசியல் ரீதியாக தாக்கும் நோக்கத்தை கர்தினால் எந்தச் சந்தர்ப்பத்திலும் கொண்டிருக்கவில்லை. ஈஸ்டர் தாக்குதல்களை நாம் தேசிய பேரனர்த்தமாக நாம் கருதுகின்றோம் . அந்தத் தாக்குதல்கள் தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்தன. அந்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருந்துகொண்டே உள்ளது” என்று அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டபோது ஈஸ்டர் தாக்குதல்களின் முக்கிய குற்றவாளிகள் மற்றும் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தத் தவறினால் சர்வதேச விசாரணையைக் கோரப்போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.