மே தினப் பேரணிகள் இம்முறை வேண்டாம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் கோரிக்கை.

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் இம்முறை மே தினப் பேரணிகளை நடத்த வேண்டாம் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் அரசியல் கட்சிகள் மற்றும் நிபுணர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பின்றி நடந்து கொண்டதால், எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் ஆபத்து இருக்கின்றது என அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்த நேரத்தில், நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவற்கான அறிகுறிகள் எங்களுக்குக் காட்டப்பட்டுள்ளதால், எம்மால் எந்தவொரு ஆபத்தான விடயங்களையும் எடுக்க முடியாது.

எனவே, இம்முறை மே தினக் கூட்டங்களை நடத்தினால் இந்த நிலைமை மிக மோசமாகும் என்பதால் எந்தவொரு பேரணிகளையோ, கூட்டங்களையோ நடத்த வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இதற்கிடையில், கொரோனா வைரஸின் பரவலைப் பொறுத்தவரை இலங்கை மோசமான ஒரு கட்டத்தில் இருக்கின்றது.

தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பின்றி நடந்து கொண்டதால், கொரோனாப் பரவல் எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கக்கூடும்.

அதேபோல், பண்டிகைக் காலங்களில் மக்களின் மோசமான நடத்தையின் விளைவு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தெரியவரும். இது மிகவும் ஆபத்தானது. எனவே, கொரோனா வைரஸின் மூன்றாவது அலை உருவாகுவதை முறையாகக் கையாளாவிட்டால், நாட்டில் நிச்சயம் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகுவதைத் தடுக்க முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.