யாழில் 13 பேர் உட்பட வடக்கில் மேலும் 15 பேருக்குத் தொற்று!

யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும், மன்னாரில் இருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 249 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 15 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நால்வருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் இருவர் வெளிநோயாளர் பிரிவிலும், இருவர் நோயாளர் விடுதியிலும் அடையாளம் காணப்பட்டனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் இருவரும் நேற்று கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவருடன் நேரடித் தொடர்புள்ளவர்கள்.

தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி இருவருக்கும், தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கும் என மூவருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

இவர் கொரோனாத் தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர் எனச் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற மூவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மன்னார் மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.