இலங்கையில் இன்று மட்டும் 997 பேருக்குக் கொரோனா! – ஆபத்தான நிலைமை என்று இராணுவத் தளபதி கவலை.

இலங்கையில் இன்று மாத்திரம் 997 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது நாட்டின் ஆபத்தான நிலைமையை எடுத்துக் காட்டுகின்றது எனவும், பொதுமக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 266 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 577 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, 7 ஆயிரத்து 152 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 647 ஆக அதிகரித்துள்ளது எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.