வடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி.

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கும், மன்னார், வவுனியாவில் தலா ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் நால்வருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 499 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே, நால்வருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்த நோயாளர் ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மன்னார் மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

வவுனியா பூவரசம்குளம் பிரதேச வைத்தியசாலையிலும் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.