ஆட்சி பீடத்தில் ஏறியிருக்கும் தமிழகத்தின் புதிய முதல்வர் மு.க. ஸ்ராலின் அவர்களுக்கு,..

வணக்கம்!…
காலம் ஒரு செங்கோலை எம் கையில் தரும்!
அதில் தமிழக மக்களின் கனவுகள் யாவும் நிறைவேறும்!!
இது மறைந்தும் மறையாத தமிழகத்தின் ஒளிச்சூரியன் கலைஞரின்
இலட்சிய நம்பிக்கை,..

ஓய்ந்தறியா உங்கள் உழைப்பால் தமிழகத்தில் மறுபடியும் தி.மு,க வின் ஆட்சி மலர்ந்து, கலைஞரின் கனவு நம்பிக்கை நிறைவேறியுள்ளது! மிக்க மகிழ்ச்சி!,..
தமிழக மக்களின் மனங்களில் மட்டுமன்றி, அவர்களின் கனவுகளை வெல்லும் ஆட்சி பீடத்திலும் முதல்வராக உங்களுக்கு சிம்மாசனம் கிடைத்துள்ளது.

ஈழத்தமிழர்களின் நீதியான உரிமைப்போராட்ட காலத்தில் இங்கிருந்து அரசியல் ஏதிலிகளாக தமிழகம் வந்த எமது மக்களை அன்பால் அரவணைத்து வரவேற்றவர்கள் தமிழக மக்கள்.
திராவிட இயக்க கொள்கை வழி நின்று,.. வந்தாரை வரவேற்கும்
பண்பாட்டின் நெறி நின்று ஈழத்தமிழ் மக்களை மட்டுமன்றி ஆரம்பகால
எமது நீதியான உரிமைப்போராட்ட இயக்கங்களையும் நீங்கள் ஆதரித்து வரவேற்றீர்கள்.

எமது நன்றிக்கடனுக்கு உரித்தான தமிழக மக்கள் நீடித்த மகிழ்வுடன்
வாழ்வாங்கு வாழும் நீதி ஆட்சி மறுபடி மலர வேண்டும்!
சமன் செய்து சீர் தூக்கும் செங்கோல் ஆட்சியென அது நிலவவேண்டும்!
எமதும், உங்களதும், தமிழக மக்களினதும் அந்த ஆழ்மன விருப்பங்களே
இன்று நிறைவேறியிருக்கிறது,
முதல் தடவையாக தமிழக முதல்வராக ஆட்சி பீடம் ஏறும் உங்களுக்கு
ஈழத்தமிழ் மக்களின் சார்பாக, ஈழமக்கள் ஜனநாயாக கட்சியின் சார்பாக,..
எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

குறையிலா ஆட்சி நிலவட்டும்,.. தமிழக மக்களின் முகங்கள் நிமிரட்டும்,..
எங்கும், அறம் வெல்லும்! அநீதி தோற்கும்!!

டக்ளஸ் தேவானந்தா
கடற்றொழில் அமைச்சர்,
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனாநாயக கட்சி!

Leave A Reply

Your email address will not be published.