நினைவேந்தலை ‘சூம்’ தொழில்நுட்பம் மூலம் அனுஷ்டிக்க சுமந்திரன் அழைப்பு

இறுதிப் போரில் உயிரிழந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்க ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக மக்களை ஒன்றிணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்று தரணியெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் சமூகத் தொற்றைக் கருத்தில்கொண்டு ‘சூம்’ இணையத்தினூடாக மக்களை ஒன்றிணையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மூன்றாம் அலை மிக மோசமாக நாட்டில் பரவியுள்ள நிலையில், இப்படியான கால கட்டத்திலே மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எவ்வாறு நாம் அனுஷ்டிக்க முடியும் என்பது குறித்து சிந்திக்கின்ற போது மக்களை ஒரு இடத்தில் கூடச் செய்வது சமூகப் பொறுப்பற்ற செயலாகவும் மாறிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இம்முறை நினைவேந்தலை தொழில்நுட்ப ரீதியாகக் கையாள்வதே சிறந்ததாகும் எனக் கூறியுள்ள அவர், ‘சூம்’ தொழில்நுட்பம் மூலமாக அனைவரும் சேர்ந்து அனுஷ்டிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று மாலை 6 மணிக்கு வணக்கஸ்தலங்களில் மணி ஒலிக்க விட்ட பின்னர் அமைதிப் பிரார்த்தனையின் பின்னர் மாலை 6.15 இல் இருந்து ஒரு மணித்தியாலம் இணைய வழியாக ஒன்றிணைந்து இந்த நினைவேந்தல் தினத்தை நினைவு கூருவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.