மேலும் 5 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள்: இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கும் சீனா

மேலும் 5 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள்:
இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கும் சீனா

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தகவல்

இலங்கைக்கு மேலும் 5 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை அன்பளிப்பாக வழங்குவதற்கு சீனத் தூதரகம் முன்வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாத இறுதியில் 6 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை சீன அரசு அன்பளிப்பாக வழங்கியிருந்தது. இதில் ஒரு தொகை தடுப்பூசி இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்குச் செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவின் ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியதையடுத்து இலங்கை மக்களுக்கு இம்மாதம் 8ஆம் திகதி முதல் இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் தற்போது வரை ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் முதல் டோஸ் 4 இலட்சத்து 57 ஆயிரத்து 840 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தொற்று நோய் பிரிவு தெரிவிக்கின்றது.

இதனிடையே 9 இலட்சம் ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகள், ஜூன் மாதமளவில், இலங்கைக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இலங்கையில் அஸ்ட்ரா செனெகா, கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசு வெளிநாடுகளுடன் பேச்சுகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.