அங்கொடை முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் கொரோனா உறுதி.

அங்கொடை, சிறிபெரகும் வீதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் உள்ள 29 முதியவர்கள் மற்றும் பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்கும் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் குறித்த முதியோர் இல்லத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதையடுத்து முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அனைவருக்கும் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்திலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே சென்று வரும் நிலையில், அவர் மூலமாக ஏனையோருக்குத் தொற்று பரவல் அடைந்துள்ளது எனக் கொதட்டுவ பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த முதியவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நோய் நிலைமைகளை உடையவர்கள் என்பதால் இவர்களைத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குக் கொண்டு செல்வதில் சிரமம் நிலவுகின்றது எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கூறியுள்ளார்கள்.

இதன் காரணமாக குறித்த முதியோர் இல்லத்தை தனிமைப்படுத்தல் மையமாக மாற்றித் தொற்றுக்குள்ளான வயோதிபர்களை அதில் வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசித்து தீர்மானித்துள்ளதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.