தமிழரின் இணைந்த வடக்கு – கிழக்கு தாயகக் கோட்பாட்டை அமெரிக்கா அங்கீகரிப்பதை வரவேற்கின்றோம்! – ரெலோ அறிக்கை.

அமெரிக்க காங்கிரஸ் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூர்வீகத் தாயகமாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்களின் ஏற்பாட்டிலே இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையைத் தயாரித்து வெளியுறவுக் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவர்களின் அங்கீகாரத்தின் பின்னர் இது செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பம் நிலவுகின்றது.

அமெரிக்காவினுடைய இந்த நிலைப்பாடு தமிழர்களுடைய தாயகக் கோட்பாட்டை சர்வதேச அரங்கிலே அங்கீகரிப்பதற்கானதும் எம்முடைய இனத்தினுடைய தேசியக் கோரிக்கைகளை படிப்படியாக வெற்றிபெற உதவும் நிலைப்பாடாகவும் அவதானிக்கிறோம்.

இதன் பின்னணியாக அண்மையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் 13ஆவது அரசமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் அமைந்துள்ளது.

ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கு பிரதேசத்தை வலியுறுத்திய இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1987இல் உருவாக்கப்பட்ட அரசமைப்பு திருத்தம் பூகோள அரசியலில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை தமிழ் தரப்புகள் தட்டிக் கழிக்க முடியாது.

இணைந்த வடக்கு – கிழக்கு இலங்கைத் தமிழரின் வரலாற்று அல்லது பூர்வீக வாழ்விடப் பிரதேசங்கள் என்பதை வலியுறுத்தி இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்று சர்வதேச அரங்கிலே குறிப்பாக அமெரிக்கா வடக்கு – கிழக்கு இலங்கைத் தமிழரின் பூர்வீகத் தாயகமென அங்கீகரிக்க முனைய வழியமைத்திருக்கின்றது.

இந்தப் பிரேரணை வெளியுறவு கமிட்டியின் அனுமதியைப் பெறும் பட்சத்தில் அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

இது தமிழரின், இணைந்த வடக்கு – கிழக்கு தாயகக் கோட்பாட்டுக்கும் அதன் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்குமான கோரிக்கைக்கும் வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

அமெரிக்காவின் வெளியுறவு கமிட்டியின் முடிவு இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது. உள்ளக அரசியலில் தமிழர் தரப்பாகிய நாம் ஒன்று பட்ட குரலுடன் செயற்படுவதே சர்வதேச நாடுகளின் முயற்சிக்குப் பலமளிக்கும்.

இந்தப் பூகோள சூழல்களை உணர்ந்து அதை எமது மக்களுக்குச் சாதகமாக்க தமிழர் தரப்பின் ஐக்கியத்தின் அவசியத்தை அண்மையில் நாம் வலுயுறுத்தியுள்ளோம். அதற்கான ஆரம்பகட்ட பேச்சுக்களையும் முன்னெடுத்துள்ளோம்.

தமது பதவிகள், தேர்தல் நோக்கங்கள், கட்சி நலன்கள் , தற்பெருமை என்பவற்றை கடந்து நாம் இந்தக் கணத்தில் எமது மக்களுக்காக ஒன்றுபட்டு சர்வதேச அரசியல் சூழலை சாதகமாக்க செயற்படத் தவறினால், எந்த நியாயப்படுத்தலுக்கும் அப்பால், பாரிய வரலாற்றுத் துரோகத்தை இழைத்தவர்கள் ஆவோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.