அஸாத் ஸாலி தொடர்பான விசாரணைகள் நிறைவு! – உயர்நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் அறிவிப்பு

கொழும்பு : முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன என்று சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

அஸாத் ஸாலி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளின்போதே, சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய ஊடக மாநாடு தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஸாத் ஸாலி, கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அடிப்படை உரிமை மீறலாகும் எனத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை அவர் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை விசாரணை செய்யும் நீதியரசர் குழாத்தில் இருந்து நீதியரசர் ஜனாக் டி சில்வா விலகிக்கொண்டதைத் தொடர்ந்து, மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அஸாத் ஸாலி மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன என்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.