சட்டப் பாதுகாப்பு விலக்கல்: இந்தியாவில் முடக்கப்படுமா ட்விட்டர்!

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை (இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021) மத்திய அரசு வெளியிட்டது.

இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்பதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் புதிய ஐடி விதிகளை பின்பற்றும் முடிவில் இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்தது. அதே சமயம் இது தொடர்பாக அரசுடன் சில விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

புதிய ஐடி விதிமுறைகள் அமலாக்கம் குறித்து வருகிற 18ஆம் தேதி விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு கொண்டுவந்த புதிய ஐடி விதிமுறைகள் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை மத்திய அரசின் விதிமுறைகளை ஏற்ற நிலையில், ட்விட்டர் மட்டும் அதனை ஏற்க மறுத்தது. புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க, பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும் ட்விட்டர் நிறுவனம் அதை தவறிவிட்டது. ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் இந்திய சட்டங்களை பின்பற்றுவதில் ஏன் தயங்குகின்றன என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, ட்விட்டர் நிறுவனத்திற்கான சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது. இதன் மூலம், தனி நபர் கருத்தும் ட்விட்டர் கருத்தாகவே இனி பார்க்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, ட்விட்டர் நிறுவனம் மீது உத்தர பிரதேசத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5ஆம் தேதி அப்துல் சமாத் என்ற இஸ்லாமிய முதியவர் சில இளைஞர்கள் தாக்கப்பட்டு, அவரின் தாடி மழிக்கப்பட்டது. அந்த முதியவர் இஸ்லாமியர் என்பதால், ஜெய் ஸ்ரீராம் என்று கூறச் சொல்லி இந்த தாக்குதல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்த சம்பவத்திற்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை, இது மத ரீதியான மோதல் கிடையாது என்று உத்தரப்பிரதேச காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். ஆனாலும், அந்த வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், மத ரீதியான மோதலை தூண்டியதாக ட்விட்டர் நிறுவனம் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ட்விட்டர் தளம் இந்தியாவில் முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.