யூடியூபர் மதன் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது – சென்னை உயர் நீதிமன்றம்

யூடியூபர் மதன் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதனை முழுமையாக கேட்டுவிட்டு முன் ஜாமின் வழக்கில் வாதிடும்படி மதன் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது.

யூடியூபில் மதன் என்பவர், சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் ‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார். இந்தச் செயல் அவரின் பக்கத்துக்கு அதிக பார்வையாளர்களை இழுத்து வந்தது. அவரின் யூடியூப் பக்கத்தை 7.8 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருந்தனர்.

அவர் விளையாடும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மதன் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்துறையினர் மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். நேரில் ஆஜராகாத பப்ஜி மதன் தலைமறைவானார். இதனையடுத்து அவர்மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முன் ஜாமீன் கோரி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் எனவும், மதனின் மனைவி கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், தெரிவித்து, முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி தண்டபாணி, யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பி, ஆரம்பமே கேட்க முடியாத வகையில் இருப்பதாக தெரிவித்தார். அந்த பதிவுகளை முழுமையாக கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.