மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தேவையான தடுப்பூசியைத் தரவேண்டும் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘கொரோனா பாதிப்பால் தமிழ்நாடு ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.கவினர் பணியாற்றியது மட்டும் அல்லாமல் மக்களின் ஒத்துழைப்பால் பாதிப்பு இப்போது குறைந்து வருகிறது.

கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான். அதனால் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இந்தியாவில் கொரோனாவை ஒழித்த முதல் மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை அனுப்பி வைக்க வேண்டும். நான் எந்நேரமும் ஓடுகிறேன். முன்னுதாரணமாக இருக்கிறேன் என்றார்கள். நம் அனைவருக்கும் முன்னுதாரனமாக இருப்பவர் நம் முதல்வர் தான்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பணியாற்ற தொடங்கியவர் முதல்வர்.
10 ஆண்டுகள் சீர்கெட்டு போன நிர்வாகம். இவை அனைத்தையும் சீர்செய்ய 5 ஆண்டுகள் தேவைப்படும் என வல்லுநர்கள் நினைத்தார்கள். அதை 35 நாட்களில் செய்து முடித்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிரதான எதிர்கட்சியாக இருக்க கூடிய அ.தி.மு.க கொரோனா காலத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு கூட உதவவில்லை. ஆனால் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த போது மக்களுக்காக அனுதினமும் உழைத்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.