17 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு! – இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 17 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது என சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று (24) அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேநேரம், பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 216 பேரின் தண்டனை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியல் கைதிகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுப்பில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நேற்று முன் தினம் (22) நாடாளுமன்றில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, அரசிடம் வலியுறுத்தி இருந்தார்.

இந்தநிலையில், அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முறைப்படி இடம்பெறுகின்றன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.