சிறிதரன் குழுவினரை ஏற்றிச்சென்ற படகோட்டி இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணை.

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி – கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை ஏற்றிச் சென்ற படகு உரிமையாளரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கௌதாரிமுனையில் மூன்று மாதங்களாக சீன நாட்டவரால் நடத்தப்படும் கடலட்டைப் பண்ணை தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இது தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் உதவியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் கௌதாரிமுனைக்கு நேற்று புதன்கிழமை காலை 8 மணியளவில் படகில் பயணித்து முற்பகல் 10.30 மணியளவில் கரை திரும்பியிருந்தனர்.

மேற்படி குழுவினர் படகில் சென்று வந்த விடயம் செய்தியாக வெளிவந்த நிலையில் இராணுவப் புலனாய்வாளர்கள் சிலர், நேற்று மாலை மீனவர் சங்கம் ஊடாக படகின் உரிமையாளரான படகோட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

காலையில் படகு சென்று வந்தமையை மாலையே கண்டுபிடிக்கும் இராணுவப் புலனாய்வாளர்களால் கடந்த மூன்று மாதங்களாக இயங்கும் சீன நாட்டவரின் கடலட்டைப் பண்ணையை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இராணுவப் புலனாய்வாளர்களால் படகோட்டி விசாரணை செய்யப்பட்டமைக்கு மீனவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்குத் தாம் ஒருபோதும் அடிபணியோம் என்றும் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.