யாழ்ப்பாணத்தில் இன்று இரண்டாம் கட்டத் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்துக்காக 50 ஆயிரம் ‘சினோபார்ம்’ தடுப்பூசி கிடைத்திருக்கின்றன என்று வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“”இரண்டாவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று 5ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இடம்பெறும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள், திகதிகள் பற்றிய விபரங்கள் அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளால் அறியத்தரப்படும்.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகள் தொடர்பில் ஒவ்வாமை உடையவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்.போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறான நிலைமைகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்படுபவர்கள், தமது பிரதேசத்துக்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தை பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.

அவ்வாறே மேற்குறிப்பிடப்பட்ட வகையில் அடங்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன

தொழிற்சாலைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அப்பிரதேசத்துக்குரிய சுகாதார வைத்திய அதிகாரியினால் அறிவிக்கப்படும்.

யாழ். மாவட்டத்தில் முதல் கட்டமாக 49 ஆயிரத்து 602 பேருக்கு முதல் கட்டமாக கொரோனாத் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டது. இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு மருந்தேற்றும் பணிகள் கடந்த ஜூன் 28ஆம் திகதி முதல் இம்மாதம் 3ஆம் திகதி வரை இடம்பெற்றன. இதில் 46 ஆயிரத்து 648 பேர் இரண்டாவது தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டனர்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.