ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு அறிவிப்பு.

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி சிறுமி ஒருவரை இணையத்தில் பாலியல் விற்பனைக்கு விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இதை சுட்டிக்காட்டியிருந்தார்.

விசாரணைக்கு இடையில், பாடசாலைகள் ஆரம்பிக்கும் வரை குழந்தைகள் ஆபாச வலைத்தளங்களை அணுகுவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யுமாறு சி.ஐ.டி மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்திடம் நீதவான் கோரிக்கை விடுத்தார்.

கைப்பேசிகள் அல்லது கணினிகள் குழந்தைகளின் கைகளுக்கு கிடைப்பதை தடுக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய நீதவான் பெற்றோர்கள் பணிக்காக வீட்டிலிருந்து சென்றிருக்கும் போது குழந்தைகள் இந்த சாதனங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

மேலும் ,இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகலாம் என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

அது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.ஐ.டி மற்றும் சிறுவர்கள் பணியகத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.