வங்கியைக் கொள்ளையிட்ட 10 வயதுச் சிறுவன்!

நீமுஜ்: ம.பி.,யில் கூட்டுறவு வங்கி ஒன்றில் நுழைந்த 10 வயது சிறுவன், வெறும் 30 நொடிகளில் 10 லட்சம் ரூபாயை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் நீமுஜ் மாவட்டம் ஜாவத் என்னும் இடத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது. பகல் 11 மணியளவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த போது, வங்கி கேஷியர் அறைக்குள் இருந்த ரூ.10 லட்சம் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் கேஷியர் அறைக்குள் சிறுவன் நுழைந்து திருடி சென்றது தெரியவந்தது.

வங்கி பணபரிவர்த்தனை செய்வதற்காக கவுன்டர் முன்பாக வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்கையில், வங்கி கேஷியர் தனது கேபின் அறையை பூட்டாமல் பக்கத்து அறைக்கு சென்றுள்ளார். அப்போது 10 வயதுள்ள சிறுவன் ஒருவன் விறுவிறுவென வங்கியினுள் நுழைந்து, கேஷியர் கேபின் அறைக்குள் சென்றான். அவரது கல்லாப்பெட்டியை திறந்து, ரூ.500 நோட்டுகள் கொண்ட 20 கட்டுக்களை எடுத்து, தான் வைத்திருந்த பையினுள் வைத்து ‛எஸ்கேப்’ ஆனான். இவை அனைத்தும் 30 நொடிகளில் அரங்கேறியுள்ளது.

அச்சிறுவன் கேஷியர் டேபிளின் உயரம் கூட இல்லாததால், வரிசையில் நின்ற யாரும் கவனிக்கவில்லை. இச்சம்பவத்திற்கு முன்பாக கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு முன்பாக 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், வங்கிக்குள் வந்து ஓரமாக காத்திருந்துள்ளான். சுற்றும் முற்றும் நோட்டமிட்டுக் கொண்டிருந்த அவன், கேஷியர் அறையை விட்டு கிளம்பியதும், வெளியே நின்ற அச்சிறுவனுக்கு ‛சிக்னல்’ கொடுத்ததும் சிசிடிவி.,யில் பதிவாகியுள்ளது. வெறும் 30 நொடிகளில் ரூ.10 லட்சத்தை திருடி சென்ற சிறுவனையும், அவனுக்கு உதவிய இளைஞனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.