போதைப் பொருள் வியாபாரிகள் நான்கு பேர் கைது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இருந்து போதைப் பொருள் வியாபாரிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இதில் ஓட்டமாவடி தபாலக வீதியில் மிக நீண்ட நாட்களாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் மற்றும் பாவனையாளர் ஒருவருமாக இரண்டு நபர்களும், செம்மண்ணோடை ஹாஜியார் வீதியிலுள்ள பிரபல கஞ்சா வியாபாரிகள் இருவருமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஓட்டமாவடி தபாலக வீதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், மீராவோடை சந்தை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவருமாக இரண்டு பேர் ஓட்டமாவடி தபாலக வீதியில் வைத்து 2360 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு செம்மண்ணோடை ஹாஜியார் வீதியிலுள்ள 25 மற்றும் 29 வயதுடைய இரண்டு நபர்களும், அவர்களிடம் இருந்து இரண்டு (02) கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் சென்ற பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வலைப்பின் போதே மேற்படி போதைப் பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதுடன், இவர்களுடன் தொடர்பை பேணியவர்கள், கஞ்சா கொள்வனவு செய்தோர் தொடர்பிலும் விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பான விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.