பொருளாதாரம் படுவீழ்ச்சி; பாரிய அழுத்தத்தில் மக்கள் எரான் விக்கிரமரத்ன குற்றச்சாட்டு.

“நாட்டு மக்கள் தற்போது அதிக அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். நமது நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் பாரியளவு பொருளாதார தாக்கத்தை தற்போதே எதிர்கொண்டுள்ளது. ஒருபுறம் வருமானம் குறைவடைந்துள்ளது. பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. வருமானம் எவ்வகையிலும் அதிகரிக்கவில்லை. அதிகரிக்கப்படவுமில்லை. வேலைவாய்ப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நாளாந்த வருமானம் பெறுபவர்கள் பாரிய பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொண்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு எமது ஆட்சியில் அரச ஊழியர்களின் வருமானத்தை பாரியளவு அதிகரித்தோம். அதனைச் சிலர் மறந்திருப்பர். ஆரம்ப நிலையிலிருந்த ஊழியர்கள் 11 ஆயிரத்து 730 ரூபா சம்பளத்தையே பெற்றனர். எமது அரசில் அதனை 24 ஆயிரத்து 250 ஆக அதிகரித்தோம்.

அதேபோன்று மேலாண்மை உதவியாளர்கள் பெற்று வந்த அடிப்படைச் சம்பளமான 13 ஆயிரத்து 990 ஐ ரூபாவை 28 ஆயிரத்து 940ஆக அதிகரித்தோம். இது நூறு சதவீத அதிகரிப்பு. அதேபோன்று துணை அதிகாரிகள் பெற்றுவந்த ஆரம்பச் சம்பளமான 11 ஆயிரத்து 215ஐ ரூபாவை 31 ஆயிரத்து 490 ரூபாவாக அதிகரித்தோம்.

அதேபோன்று நிறைவேற்று ஊழியர்களது ஆரம்பச் சம்பளத்தை 22 ஆயிரத்து 935 இலிருந்து 47 ஆயிரத்து 615 ஆக அதிகரித்தோம்.

குறிப்பிட்டுக் கூறினால் குறைந்த செலவீனம் இருந்த காலமாக எமது நல்லாட்சிக் காலத்தைக் குறிப்பிடலாம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.