கொரோனோவைக் கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்குங்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள்.

“வடக்கு மாகாணத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினருக்குப் பூரண ஒத்துழைப்பை பொதுமக்கள் வழங்க வேண்டும்.”

இவ்வாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் அரசால் வழங்கப்பட்ட ஓட்டோக்களைப் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி வைக்கும் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொலிஸ் நிலையங்களுக்கு இன்று ஓட்டோக்கள் வழங்கப்பட்டமைக்கு இந்த நாட்டின் அரசுக்கும் எமக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்குத் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொலிஸ் நிலையங்களில் இந்த வாகனப் பிரச்சினையானது நீண்டகாலமாகக் காணப்பட்டது. அந்த வாகனப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் குறித்த வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள கொரோனா நிலைமை மற்றும் ஏனைய பொதுமக்கள் சேவை வழங்க பொலிஸ் நிலையங்களில் வாகனத் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாகக் காணப்பட்டது. அந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு இன்று கிட்டியுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் தலா 2 ஓட்டோக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக திறக்கப்படவுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த ஓட்டோக்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் எதிர்வரும் காலங்களில் பொலிஸாருக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் தேவையான வாகனங்கள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்றது.

தற்போது நாடுபூராகவும் கொரோனா நிலைமை சற்று அதிகமாகக் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் சில பகுதிகள் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

நான் ஏற்கனவே தென் மாகாணத்தில்தான் கடமையாற்றியிருந்தேன். வடக்கு மாகாணத்தில் நான் கடமை ஏற்றபின் பருத்தித்துறை மற்றும் ஏனைய சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலின்படி சில வேலைத்திட்டங்கள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்குப் பூரண ஒத்துழைப்பை இந்தக் காலப்பகுதிகளில் வழங்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.