ரிஷாத் வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளரின் கைத்தொலைபேசி பகுப்பாய்வுக்கு அனுப்பிவைப்பு.

“நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளரின் கைத்தொலைபேசி பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொரளைப் பொலிஸாருக்கு மேலதிகமாக இரண்டு விசேட குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றன.

கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரும், கொழும்பு தெற்கு பிரிவு குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

நேற்று குறித்த குழுக்கள், சிறுமி முன்னதாக வசித்த, பாடசாலைக்குச் சென்ற அவிசாவளை, புவக்பிட்டி – கிரிவந்தல பிரதேசத்தில், நான்கு பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தன.

குறித்த சிறுமி, கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த இரண்டு குழுக்கள், டயகம பகுதிக்குச் சென்று, சிறுமியின் தாயாரிடம் இன்று மீளவும் வாக்குமூலம் பெறவுள்ளன. ஏனைய சிலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

அத்துடன், ரிஷாத் பதியுதீன் எம்.பியின் வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளரின் கைபேசியை பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த கைபேசியில் ஏதேனும் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் அந்தக் கைபேசி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிக்கை ஒன்றும் பெறப்படவுள்ளது.

இதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கைபேசி தரவுகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கும், வங்கிக் கணக்கை ஆராய்வதற்கும் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இந்தத் தரவுகளின் அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேநேரம், மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.