ஒட்டுமொத்த மக்களும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள் கஜேந்திரகுமார் பகிரங்க எச்சரிக்கை.

“இராணுவ மயமாக்கலை தீவிரப்படுத்தும் அரசு தனது கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த மக்களும் அரசுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் பேசுகையில்,

“எரிபொருள் விலை அதிகரிப்புக்கு வலுசக்தி அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக்கூற வேண்டியவர் அல்லர். ஒட்டுமொத்த அரசும் இதற்குக் காரணம். வலுசக்தி என்பது அபிவிருத்திக்கு மிக முக்கியமானது. இன்று நாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு இந்தச் சபையில் உள்ள சகலரும் பொறுப்புக்கூற வேண்டும். இதுவரை காலமாக முறையான கொள்கைத்திட்டம் ஒன்று இல்லாது அரசுகள் செயற்பட்டமையே இதற்குக் காரண ம்.

நாட்டின் வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய பாதுகாப்புக்கு 10.3 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது என்றால் யார் உங்களின் எதிரிகள் என்பதை நீங்க கூற வேண்டும்? இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் போர்களைத் தொடுக்கவில்லை. அப்படி இருந்தும் இந்த நாட்டில் ஒரு இனக்குழுவுக்கு எதிராகவே நீங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளீர்கள். இந்த நாட்டின் பிரஜைகளையே நீங்கள் எதிரிகளாக நினைத்துள்ளீர்கள். ஏனென்றால் அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்கவோ அவர்களை அங்கீகரிக்கவோ நீங்கள் தயாராக இல்லை. இதுதான் அவர்களுக்கு எதிராகப் போரைத் தொடுக்கவும், அவர்களை கொன்று குவிக்கவும் காரணமாக அமைந்துள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகவே அரசின் பாதுகாப்புக் கொள்கை கையாளப்பட்டது. 32 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை கையாளப்பட்டது.

அன்று தமிழர்கள் போன்று இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் உங்களின் ஊழல்வாத அரசைக் கொண்டு செல்ல இவ்வாறான அடக்குமுறைகளைக் கையாண்டு வருகின்றீர்கள். இராணுவ ஆக்கிரமிப்புக்குள் நாடு தள்ளப்பட்டு வருகின்றது.

சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தி அவர்கள் உங்களைக் காப்பற்றுவார்கள் என்ற காரணத்துக்காகச் சிறுபான்மை மக்களை அடக்குமுறைக்குள் உட்படுத்த நினைக்கின்றீர்கள். நீங்கள் எமது குரலுக்கு செவிமடுக்க மறுக்கின்றீர்கள்.

இன்று அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு இது தீர்வு அல்ல. தமிழ் மக்கள் 73 ஆண்டுகளாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இன்று முஸ்லிம்களும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்று ஒட்டுமொத்த நாடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அரசு தனது கொள்கையை மாற்றிக்கொண்டு பயணிக்கவில்லை என்றால் அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்குவர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.