விசாரணைகள் திசை மாறுகின்றனவா? மகள் முன்னரே கெடுக்கப்பட்டவரா என போலீசார் கேட்கிறார்கள் – ஹிஷாலினியின் தாய் ரஞ்சனி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்காரியாக பணிபுரிந்தபோது இறந்த 16 வயதை அடையாத சிறுமி ஹிஷாலினியின் தாய் இறந்த தனது மகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தனது மகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாரா என்று பொலிசார் அவரிடம் கேட்கிறார்கள் என்றும், இதற்கு முன்பு அப்படியான ஒரு சம்பவம் நடந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டயகம பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு ஒரு போலீஸ் குழு சென்று அவரது பெற்றோரிடம் கேள்வி எழுப்பிய பின்னர் அவர் ஊடகங்களுடன் பேசிய போதே அவர் இக் கருத்தை வெளியிட்டார்.

ஹிஷாலினி இறந்த வீட்டில் என்ன நடந்தது என விசாரணைகளை மேற்கொள்ளாது , ஹிஷாலினி வாழ்ந்த பகுதியில் விசாரணைகளை போலீசார் நடத்தி இழுத்தடிப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளன. எனவே பல அமைப்புகள் நீதி கேட்டு போராட்டங்களிலும் இறங்கியுள்ளன. அத்தோடு நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கை இல்லை என நேற்று ஊடகமொன்றில் பேசிய ஐக்கிய மனித உரிமை அமைப்பின் தலைவர் பிரணீத்தா வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

அவர் மேலும் பொன்னையா என்ற தரகருக்கு 2 லட்சத்துக்கு அதிகமான பணம் ஹிஷாலினியின் சம்பளமாக கிடைத்துள்ளதாகவும் , அவரே அப் பணத்தை ஹிஷாலினியின் தாயாருக்கு கொடுத்ததாகவும் , தாங்கள் விசாரித்த வேளையில் இந்த விபரங்கள் தெரிய வந்தது எனத் தெரிவித்தார். அதை ஹிஷாலினியின் தாயாரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அத்தோடு ஹிஷாலினியோடு நேரடியாக தாயாரால் கூட ஹிஷாலினியுடன் பேச முடியாமல் இருந்ததாகவும் , பொன்னையாவின் தொலைபேசி வழி ஸ்பீக்கர் போனில் ஒருமுறை பேசவிட்டதாகவும் , அப்போது மகள் தன்னை வீட்டிலுள்ளோர் தாக்குவதாக சொல்ல முற்படும் போது , ரிஷாத்தின் மனைவி பின்னாலிருந்து , ஹிஷாலினி மெதுவாக வேலை செய்வதால்தான் அப்படி நடந்ததாக சொன்னார் என ஹிஷாலினியின் தாயார் பிரணீத்தா வர்ணகுலசூரியவிடம் சொன்னதை பகிர்ந்து கொண்டார்.

தவிர பல முறை மகளை காண்பதற்கு ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு போனதாகவும் , வீட்டுக்கு உள்ளே நுழைவதற்கு அனுமதிக்காமலே, ஹிஷாலினி புத்தளம் வீட்டில் இருப்பதாக தெரிவித்து தன்னை திருப்பியனுப்பியதாகவும் , மகள் தன்னை அழைத்துச் செல்லும்படி தெரிவித்தமையால் 5 அல்லது 6ம் திகதி வந்து அழைத்து வருவதாக சொல்லியிருந்த நிலையிலேயே 3ம் திகதி இந்த சம்பவம் பொன்னையா மூலம் தெரிய வந்தது எனவும் , அதைக் கேள்விப்பட்டு ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு போனபோது எங்களை உபசரித்து இப்படி ஒரு சம்பவம் ஹிஷாலினிக்கு நடந்து விட்டது என தெரிவித்தனர் என ஹிஷாலினியின் தாயார் பகிர்ந்து கொண்ட விடயத்தை பிரணீத்தா தெரிவித்தார்.

பொரளை போலீசார் இது குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள் , பொன்னையாவும் உண்மைகளை மறைப்பது போல தெரிகிறது , அது பயத்தாலா அல்லது வேண்டுமென்றா என புரிந்து கொள்ள முடியவில்லை. ரிஷாத் பதியுதீனின் வீட்டிலுள்ளோர் தெரிவிக்கும் கருத்துகள் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. ஹிஷாலினி தங்கியிருந்ததாக அவர்கள் காண்பித்த வசதிகளே இல்லாத அறை ஒதுக்கு புறமாக இருக்கிறது. எனவே அனைத்தையும் கருத்தில் எடுக்கும் போது அது தற்கொலையாக இருக்காது எனத் தோன்றுகிறது. அதேபோல நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது என ஐக்கிய மனித உரிமை அமைப்பின் தலைவர் பிரணீத்தா வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.