போதைப்பொருட்களுடன் 8 பேர் வெவ்வேறு இடங்களில் சிக்கினர்.

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது 8 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 210 கிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிட்டிகல, கல்கிஸை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 41, 54 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொஹூவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதியாவத்த பிரதேசத்தில் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். போதியாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ், ஸ்டேஸ்புர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 5 கிராம் 320 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒருகொடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் 75ஆம் தோட்டம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 5 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளர். கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதர்நானா தோட்டத்தில் 4 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 4 கிராம் 550 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட் கல்தெமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 280 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்தெமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்” – என்றார்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 1997 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல் தருமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.