வடக்கின் புதிய பிரதம செயலாளர் இன்று பெரும் ஆரவாரத்துடன் பதவியேற்க ஏற்பாடு!

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் இன்று பெரும் ஆரவாரத்துடன் தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தின் மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த 20ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டார்.

இவர் இன்று முற்பகல் 11.40 மணியளவில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இவ்வாறு தனது கடமையை இன்று பொறுப்பேற்க வரும் புதிய பி்ரதம செயலாளரை வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையிலான பெரும் படையணி இரண்டு பஸ்களில் யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வருகின்றது.

வடக்கு மாகாணத்தின் ஆட்சி மொழியான தமிழ் மொழி தெரியாத ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவருக்குப் பெரும் வரவேற்பு இருக்கின்றது எனக் காண்பிக்கும் தேவை அரசுக்கு இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.