ஹிஷாலினி சாவு தொடர்பில் தற்போதைய நிலை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் குறைந்த வயதில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த ஹிஷாலினி என்ற சிறுமி, பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு, புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (26) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்தில், விசாரணைகளின் நிலை தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்தார்.

பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திர ஜயசூரிய, இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்திருந்தார்.

உயிரிழந்த ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுத்து, புதிதாக பிரேத பரிசோதனைகளை நடத்த வேண்டும் என பிரதி சொலிஸ்டர் ஜெனரலினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதவான், அதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதேபோன்ற ஒரு கோரிக்கையை ஹிஷாலினியின் தாயாரும் விடுத்து இருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த நிலையில் உயிரிழந்த தனது மகள் ஹிஷாலினிக்கு நீதி வேண்டும் என கோரி ஹிஷாலினியின் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்துள்ளனர். அதில் தனது மகள் ஒருபோதும் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்திருக்க மாட்டாள் என தாயான ராஜமாணிக்கம் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் வீட்டில் தனது மகளுக்கு பல துன்பங்கள் நேர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

தவிர பிரேத பரிசோதனை செய்தது ஒரு இஸ்லாமியர் என்பதால் அதில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் , எனவே புதைத்த சடலத்தை தோண்டி மீண்டும் முறையான ஒரு பிரேத பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தாயான ராஜமாணிக்கம் ரஞ்சனி கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே குறித்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினால் புதிதாக பிரேத பரிசோதனைகளை நடத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தம்மை பிணையில் விடுவிக்குமாறு சந்தேகநபர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்த நீதவான் எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சிறுமி தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், உண்மையை மறைப்பதற்காக , பெண் சந்தேகநபரின் ரிஷாட் பதியூதீனது மனைவியின் தந்தை செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் ,  இரண்டாவது சந்தேகநபரான,அவர், குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது, சிறுமியின் பெயரை ‘ஹிஷானி” என்ற சிங்கள பெயரை வழங்கியுள்ளதுடன், அவரது வயதை 18 என தெரிவத்துள்ளதையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்தேகநபர்கள் சமூகத்தில் செல்வாக்குமிக்க நபர்களுடன் தொடர்புகளை பேணி வருகின்றமையினால், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்படும் பட்சத்தில், சாட்சியங்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்து, சாட்சியங்களை இல்லாது செய்வதற்கான பலம் காணப்படுகின்றமையை அடுத்து, பிணை சட்டத்தின் சரத்துக்களின் பிரகாரம், பிணை கோரிக்கையை தான் நிராகரிப்பதாகவும் நீதவான் பகிரங்க நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

ஹிஷாலினி தீ காயங்களுக்கு உள்ளான வீட்டின் தலைவராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் காணப்படுகின்றமையினால், இந்த வழக்கின் சந்தேகநபர் பட்டியலில் ரிஷாட் பதியூதீனின் பெயரையும் இணைத்துக்கொள்ளவுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.

ஹிஷாலினியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா? என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஷாலினி கடந்த 3ம் திகதி அதிகாலை 6.45 அளவிலேயே தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் முற்பகல் 8.20 அளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

ஹிஷாலினி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், குறித்த சிறுமி 1990 அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக நேரம் கடந்து தாமதமாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

உயிரிழந்த ஹிஷாலினி தங்கியிருந்ததாகக் கருதப்படும் ஒதுக்குபுற அறையில் காணப்பட்ட கட்டிலின் மீது மண்ணெண்ணெய் அடங்கிய போத்தல் மற்றும் தலையணைக்கு கீழ் லைட்டர் ஒன்று ஆகியன காணப்பட்டதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டில் மண்ணெண்ணெய் பயன்பாட்டிற்கான எந்தவித தேவையும் கிடையாது எனவும், குறித்த வீட்டில் இதற்கு முன்னர் பணிப் பெண்களாக வேலை செய்த யுவதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது வீட்டில் பணியாற்றும் சாரதி இந்த மண்ணெண்ணெயை கொண்டு வந்ததாக ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ள போதிலும், சாரதியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் சாரதி , தாம் அவ்வாறு மண்ணெண்ணெய் கொண்டு வரவில்லை என கூறியுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திரியொன்றை பற்ற வைக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே ஹிஷாலினியின் உடை மீது தீப்பற்றியதாக ரிஷாட் பதியூதீனின் மனைவி ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்திருந்த போதும், அவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தில், ஹிஷாலினி கூச்சலிட்ட சத்தத்தை கேட்டே தான் வெளியே வந்து பார்த்த போது அவர் தீப்பற்றி எரிவதை அவதானித்ததாக  ஒன்றுக்கொன்று மரணாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான ரிசாத்தின் மனைவி, பரஸ்பர வாக்குமூலங்களை வழங்கியுள்ளமை, சந்தேகத்தை மேலும் அதிகரிக்க வைக்கிறது என அவர் தெரிவித்தார்.அதோடு , ஹிஷாலினியின் பெற்றோர், கடந்த 8 மாதங்களில் சிறுமியை பார்வையிட மூன்று சந்தர்ப்பங்களில் அவர்கள் , ஹிஷாலினி வேலைசெய்ததாகக் கூறப்படும் வீட்டுக்கு வந்தும், வீட்டின் உரிமையாளர்கள் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்பதும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஷாலினி உயிரிழந்ததன் பின்னர், பொலிஸ் ஆடையை ஒத்ததான ஆடையை அணிந்த நபர் ஒருவர், உயிரிழந்த சிறுமியின் சகோதரனை சந்தித்து, ”இந்த விடயத்தை நீண்ட தூரம் கொண்டு வேண்டிய தேவை இல்லை. போலிஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டாம்” என அழுத்தங்களை விடுத்துள்ளதுடன், 50,000 ரூபா பணத்தை ஹிஷாலினியின் சகோதரனுக்கு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதன்பின்னர், இறுதிக் கிரியைகளுக்காக மேலும் 50,000 ரூபா பணத்தை வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.இவற்றை வைத்து பார்க்கும் போது, இந்த சம்பவத்தை மறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, இந்த சம்பவத்தின் ஊடாக தெளிவாகின்றது என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஹிஷாலினி பணியில் இருந்த காலத்தில் அவருக்கான 30,000 ரூபா சம்பள பணத்தை அவருக்கு நேரடியாக வழங்காது, சந்தேகநபரான இடைதரகர் சங்கரின் வங்கி கணக்குக்கு வைப்பிலிட்டு, அதிலிருந்து 10,000 ரூபாவை தரகர் குறைத்துக்கொண்டு, எஞ்சிய 20,000 ரூபாவையே பெற்றோருக்கு வழங்கியுள்ளார் என அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

ரிசாட்டின் வீட்டில் முன்னர் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்த மேலும் 9 சிறுமிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல், குறித்த வீட்டில் பணிப்புரிந்த இரண்டு சிறுமிகள், நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனான சியாப்தீன் இஸ்மத்தினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு சிறுமி குறித்த நபரினால் இரு தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுட்டார்.

அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் 8 சீ.சீ.டி.வி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், ஆனால் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அதிகாலை 6.30 முதல் பொருத்தப்பட்டிருந்த கமராக்களில் 6 கமராக்கள் செயலிழந்துள்ளமை தமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு காரணமாக அமைந்துள்ளது என கூறிய அவர், இந்த விடயம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த சிறுமி எதிர்நோக்கிய துன்புறுத்தல்களுக்கு வீட்டுத் தலைவனான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நேரடியாக பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல், அவரையும் இந்த வழக்கில் சந்தேகநபராக எதிர்காலத்தில் பெயரிட எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டிருந்த நிலையில் , பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்படுவார் என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பிணையில் விடுவித்தால், விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதுடன், மக்கள் மத்தியிலும் அமைதியின்மை ஏற்படக்கூடும் என்பதனால், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் நீதவானிடம் மேலும் கோரியுள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து, மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படும் என்பதை அடிப்படையாகக் கொண்டு , சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க முடியாது என அவர்கள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

எனினும், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.