இன்ஸ்டாவில் ஆபாச படங்களை அனுப்பக்கோரி சிறுமிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்கள்!

ஆபாச படங்களை அனுப்பக் கோரி, இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தனியார் கம்பெனி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தம்பதி ஒருவர் வசித்து வருகிறார். அவர்களுக்கு 14வயதில் ஒரு மகள் உள்ளாள். இவர், அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையில், மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அசாருதீன், கண்ணன் ஆகியோர் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, இவள் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகவல்கள் பரிமாறி கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் இருவரும் மாணவியிடம் ஆபாச படம் எடுத்து அனுப்பும்படி மிரட்டி உள்ளனர். இதனால், பயந்து போன மாணவி தனது ஆபாச படத்தை எடுத்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனை பார்த்தவுடன் அவர்கள் மீண்டும் இதே போல் பல படங்களை அனுப்பி வைக்கும் படி மாணவியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, மாணவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரும் இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவதாக மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருச்சி, மேல சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த கண்ணன் (வயது 21) என்ற கம்பெனி ஊழியரை போலீசார் இன்று மாலை கைது செய்தனர். மேலும், அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த அசாருதீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.