காணமல்போன 53 வயது பெண் 7 நாட்களின் பின் நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்பு.

திம்புளை பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியிலிருந்து நேற்று மாலை மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை திம்பளை பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான வீ.மலர்விழி (வயது 53) என தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமல்போன குறித்த பெண் தொடர்பில் திம்புளை பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் குடை, பாதணிகள் மற்றும் கைப்பை என்பவற்றை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை நீர்வீழ்ச்சியில் சுமார் 200 அடி பள்ளத்தில் நீரில் மிதந்த நிலையில் இப்பெண்ணின் சடலம் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே நீர்வீழ்ச்சியினை பார்வையிட கடந்த மாதம் 18ஆம் திகதி சென்ற 4 சிறுமிகளில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லென்தோமஸ் தோட்ட சிறுமியான மணி பவித்ரா கால் இடறி விழுந்து காணாமல் போயிருந்தார்.

அவரை தேடும் பணியில் படையினர் ஈடுப்பட்ட போதிலும் இதுவரை சிறுமி மீட்கப்படாமல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.