கட்டுப்பாட்டை மீறினால் கடுமையான நடவடிக்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை.

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் உரிய நேரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசால் முடிவு செய்யப்படும். சுகாதார அதிகாரிகள் நிலைமையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்த பிறகு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நாடு தற்போது கொரோனா சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள அதேவேளை, பொருளாதாரம் மற்றும் சமூக அம்சங்களை சமநிலையாக அரசு பேணி வருகின்றது.

எனினும், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் அல்லது நாடு முடக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உணர்ந்தால், தயக்கமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அத்தோடு, மீண்டும் அறிவிக்கும் வரை பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.