பிறந்து 5 நாட்களேயான சிசுவின் தாய் கொரோனாவால் பரிதாபச் சாவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவின் தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.

33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று கம்பஹா பொது வைத்தியசலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமன் பதிரண ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 11ஆம் திகதி பிரசவத்துக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன்போது அவருக்கு காய்ச்சல், இருமல், தடிமன் இருந்ததால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சிசு பிரசவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் ஐந்து நாட்களுக்குப் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சிசுவுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.