தமிழக முதலமைச்சர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அடுத்த கட்டமாக கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக அரசு மேற்கொண்டு வரும் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 12வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

நோய் தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களில், கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப் பட்டுள்ள நிலையில், அது குறித்து, எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், மாவட்டந்தோறும் தொற்று எண்ணிக்கை, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறித்தும், 3ஆம் அலை வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

அடுத்த மாதம் (செப்டம்பர்) 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

இதன் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.