இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் எடுக்காததால் வெறும் 78 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 121 ரன்களும், டேவிட் மாலன் 70 ரன்களும், துவக்க வீரர்களான ஹசீப் ஹமீத் 68 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா 59 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

கடந்த போட்டிகளில் சொதப்பிய புஜாரா 91 ரன்களும், கேப்டன் விராட் கோலி 55 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜடேஜாவை (30) தவிர மற்றவர்கள் அனைவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் 278 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 76 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் தோல்வியை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் க்ராய்க் ஓவர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.