இலங்கையில் நகை வர்த்தகம் பெரிதும் பாதிப்பு

நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் நகை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்துறையைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

அடிக்கடி இதுபோன்ற முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதால் சாதாரண நாட்களிலும் வழமை போன்ற நகை வர்த்தகம் நடைபெறுவதில்லை என சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் நகை வர்த்தகத் துறையில் அன்றாடம் நாட்கூலிகளாக தொழில் புரியும் பட்டறை வேலை ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் அரசாங்கம் அவர்களுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வங்கிகள் போன்ற அரச நிறுவனங்கள் நகை அடகு பிடிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் சிறு முதலீடுகளை வைத்து நகை அடகு பிடிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் உள்ள நிலையில் அவர்களுக்கும் அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை பாரிய அளவில் நகை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அவர்களின் தொழிலாளர்களுக்கு ஓரளவாவது இக்காலகட்டத்தில் சம்பளத்தை பெற்றுக் கொடுத்து வரும் நிலையில் அன்றாட சம்பளத்திற்காக தொழில் புரிவோர் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பது மிகவும் கஷ்டமாகியுள்ளது.

அவர்களின் நிலையை கருத்திற் கொண்டு ஏற்கனவே கடந்த காலங்களில் பிரதேச செயலாளர்களினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள பெயர் விபரங்களுக்கு அமைய அரசாங்கம் அவர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்கி உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.