சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 பேர் வசமாக மாட்டினர்!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யோதவௌ காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், 30 லீற்றர் மதுபானம், 1050 லீற்றர் கோடா, பீப்பாய்கள் 05, பிளாஸ்டிக் பீப்பாய்கள் 04 உள்ளிட்ட பொருட்களுடன் 43 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முருங்கன் பிரதேசத்தைச் சேர்ந்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கெபற்றிக்கொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதவௌ காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து காடழிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒரு ஏக்கர் நிலப்பரப்பு இதன்போது அழிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. பராங்கியாவிடிய, ஹொரவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எலயாபத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனெவ காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சட்டவிரோதமாகக் காட்டுக்குள் நுழைந்து காடழிப்பில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 34, 37, 47, 59 வயதுடைய நால்வரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காலி துறைமுகம் பொலிஸ் பிரிவு, மாத்தறை வீதி, தேவெட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தீர்வை வரியின்றி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 5 ஆயிரம் புகைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்குளுவ காலி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதுருஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மாதுருஓயாவுக்கு டிரக்டரைக் கொண்டு சென்று மணல் ஏற்றிக்கொண்டிருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாமல் கம, வெலிக்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.