14 வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை; கொலையென கதறும் தாய்!

மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கள்ளியடி பகுதியில் வீட்டில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். தனது மகனை தாக்கி கொலை செய்து விட்டு , தூக்கில் மாட்டியுள்ளார்கள் என தாயார் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியாவை சேர்ந்தவரும் , தற்போது மன்னார் கள்ளியடி பகுதியில் வசித்து வரும் நாகேந்திரன் டிலக்சன் (வயது 14) எனும் சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கள்ளியடி பகுதி கிராம சேவையாளருக்கு சொந்தமான மில்லுக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அரிசி திரிப்பதற்காக குறித்த சிறுவன் சென்றுள்ளான்.

சிறுவன் அரிசி திரித்துக்கொண்டு வீடு திரும்பிய நிலையில் , மில் உரிமையாளரான கிராம சேவையாளரின் மகனும் , இன்னும் சிலரும் சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மில்லில் இருந்த பணத்தினை காணவில்லை. சிறுவன் தான் திருடிவிட்டான் என கூறி சிறுவனை வீட்டிற்குள் வைத்து தாயின் கண் முன்னால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர்.

அதன் போது , தாய் மகனை தாக்கியவர்கள் கால்களில் விழுந்து கதறி அழுத்த போதிலும் , தாயையும் கால்களால் உதைந்து தாக்கி விட்டு சிறுவனை தாக்கி விட்டு சென்றுள்ளனர். அடி தாங்க முடியாது சிறுவன் கதறி அழுத நிலையில் சிறுவனை சமாதானப்படுத்தி , தாயார் தூங்க வைத்துள்ளார்.

மகன் தூங்கிய பின்னர் தாயார் குளிக்க சென்று விட்டு , திரும்பும் போது , மகனை தாக்கிய கும்பல் மீண்டும் தனது வீட்டுக்குள் இருந்து வெளியேறி சென்றதனை அவதானித்த தாய் , வீட்டிற்குள் சென்ற பார்த்த போது , தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளான்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மகன் மீது தாக்குதல் மேற்கொண்ட கும்பலே மகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இலுப்பைக்கடவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.