பட்டமளிப்பை நிகழ்நிலையில் நடத்த யாழ். மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு.

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை முழுமையாக நிராகரிக்கின்றோம் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“யாழ். பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா பகுதி இரண்டானது செப்டெம்பர் 16,17,18ஆம் திகதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக ஒக்டோபர் 7,8 மற்றும் 9ஆம் திகதிகளில் நடத்துவதாகப் பிற்போடப்பட்டது.

அந்தத் திகதிகளில் மாணவர்களை நேரில் அழைத்து பட்டமளிப்பை நடத்துவதற்கு சுகாதார அமைச்சால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒக்டோபர் 7ஆம் திகதி நிகழ்நிலையில் நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விருப்பமின்மை காணப்படுகின்றது. இதுதொடர்பாக நாம் கடந்த 15ஆம் திகதி துணைவேந்தருக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். எனினும், துணைவேந்தரிடம் இருந்து சாதகமான பதில் எமக்குக் கிடைக்கவில்லை.

எனவே, நாடு முழுவதும் வழமைக்குத் திரும்பிய பின்னர் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கே மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடத்தாமல் நேரடியாக மாணவர்களை அழைத்து வழமை போன்று நடத்த யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கோருகின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.